எச்சம்


"அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை ,எளியதுகளுக்குக் கொடுத்துடலாம் ".

வீட்டிற்கு வந்த உடனேயே கூடத்திலிருந்த பலகையைத் தூக்கி வெளியே எறிந்தவாறே சொன்னார் ராசாத்தியின் அப்பா. அது முன்பக்க வேலியோரத்திலுள்ள கல்லின் மேல் விழுந்து சப்தமெழுப்பி அடங்கியது. முற்றத்திலிருந்து வீட்டுக் கூடத்துக்கு இரண்டு படிகள் ஏறி வரவேண்டும். அந்தக்காலப் படிகள். ஒவ்வொன்றும் ஒரு அடியளவு உயரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட உயர்ந்த படிகள். அவரது பெற்றோர் மூலம் கிடைத்த பூர்விகச் சொத்தாக எஞ்சியிருந்த ஒரே வீட்டின் படிகள். காலம் காலமாக அந்த வீட்டின் குடித்தனங்களைப் பார்த்துப் பார்த்துத் தேய்ந்த படிகள்.

குமார் அந்தப்பலகையைப் படிகளின் மீது வைத்துத்தான் இரவுகளில் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வந்து வைப்பான். குமாருக்கு அந்த வீட்டில் மிகப்பிடித்தவையாக இருந்தவை இரண்டுதான். ஒன்று அந்த மோட்டார் சைக்கிள். மற்றது ராசாத்தியின் ஒரே தங்கை கல்யாணி.

பலகை விழும் சத்தம் கேட்டு பாடக்கொப்பியோடு உள்ளேயிருந்து வந்து எட்டிப்பார்த்தாள் கல்யாணி. அவள் இந்த வருடம் தான் உயர்தரப்பரீட்சை எழுதுவதற்காகக் காத்திருக்கிறாள். கண்களில் மேற்படிப்புப் பற்றிய கனவுகள் மிதந்தன. அம்மா இறக்கும் முன் அக்காவிடம் தங்கையை நன்றாகப் படிக்கவைக்கும் படி சொல்லியிருக்கிறாளாம். முற்றத்தைப் பார்த்துவிட்டு, வாசல் தூணைப் பிடித்தவாறே கண்கள் கலங்கிச் சிவந்திருந்த அக்காவைப் பார்த்தாள். உதடுகள் துடித்தபடி பெரும் அழுகையை அடக்கச் சிரமப்பட்டபடி நின்றுகொண்டிருந்தாள் ராசாத்தி.

வெளியே போய்விட்டு அப்போதுதான் வந்த அப்பா, சட்டையைக் கழற்றிவிட்டுச் சாய்மனைக் கதிரையில் உட்காந்து கொண்டார். போன காரியம் என்னவாயிற்று என அப்பா ஏதாவது சொல்வாரென அப்பாவை ஒரு கணம் பார்த்தாள் ராசாத்தி. ஆளுருக்கும் வெயிலின் கிரணங்கள் , முகத்தில் வயோதிபத்தையும் மீறிக் கருமையைத் தந்திருந்தது. இளகிய மனம். அன்பான அப்பா. தற்போதைய முகத்தில் கோபத்தின் அடர்த்தி, இயலாமையின் பரிதவிப்பு வியாபித்திருந்தது. வியர்த்து வழிந்த மேனியைத் துண்டால் துடைத்தவாறே கண்மூடிக் கொண்டார் அவர்.

கல்யாணி உள்ளே போய் கூஜாவிலிருந்த குளிர்ந்த நீரை ஒரு கிளாஸில் எடுத்துவந்து அப்பா முன்னிருந்த சிறிய மேசை மேல் வைத்து " என்னாச்சுப்பா? " என்றாள். அவர் மெதுவாகக் கண்திறந்து பார்த்து திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டார். அவராகவே சொல்லுவார் என அவள் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள்.

உள் அறையில் தொட்டிலில் படுத்திருந்த ராசாத்தியின் ஆறுமாதக் குழந்தை சிணுங்கும் சப்தம் கேட்டது. ராசாத்தி திரும்பவும் அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு தனது அறைக்குப் போய்த் தொட்டிலை ஆட்டத்தொடங்கினாள். தாலாட்டாக எதையும் பாடவில்லை. கண்ணில் வழியும் கண்ணீர் குரலைக் கரகரப்பாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும்.

இனி அவளது வாழ்வின் எஞ்சிய நாட்களில் குமார் இல்லை என்பது மட்டும் அப்பா சொல்லாமலேயே புரிந்துவிட்டது. அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டாள். குமார் கடைசியாக வீட்டைவிட்டுப் போகும்போது தன்னால் இயன்றதையெல்லாம் கொண்டுபோயிருந்தான்.குழந்தை தூங்கியபிறகு அலமாரியிலிருக்கும் அவனது பழைய உடுப்புக்களையும், கட்டிலின் கீழிருக்கும் ஒரு சப்பாத்துச் சோடியினையும், மேசையின் மேலிருக்கும் அவனது சீப்பு மற்றும் எண்ணெய் போத்தலையும் சேர்த்து மூட்டை கட்டி அப்பாவிடம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஓடலாயிற்று.

குழந்தை கண்மூடியிருந்தது. தொட்டில் ஆடுவது ஒரு கணம் நின்றுபோயிடினும் கைகள் இரண்டையும் இறுக்க மூடிக் கண் திறந்து பார்த்து மலங்க மலங்க விழித்தது. விழித்த கண்களில் தூக்கம் இன்னும் மிச்சமிருப்பது தெரிந்தது. ராசாத்தி தொட்டிலை ஆட்டிக் கொண்டேயிருந்தாள். இந்தத் தொட்டிலைக் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட அன்றுதான் குமாரிடமிருந்தான இறுதி அடிகள் அவளுக்கு விழுந்தன.

அவனது அடிகளில் என்றும் கணக்குவழக்கே இருந்ததில்லை. சின்னச் சின்னக் கோபத்துக்கெல்லாம் கை நீட்டப்பழகியிருந்தான். அவளும் அமைதியாக அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டேயிருப்பாள். அவன் வீட்டிலில்லாத பொழுதுகளில் தன் நிலையை எண்ணி அழுவாள். அவன் முன்னால் அழுதாலும், மூதேவி எனத் தொடங்கும் வசவு வார்த்தைகளைக் கொண்டு திட்டியவாறே திரும்பத் திரும்ப அடிப்பான். அன்றைய தினம் பெரும் பிரச்சினை வரக்காரணம் அவனது அடிகளையும், கொடுஞ்சொற்களையும் அப்பா கேட்க நேர்ந்ததுதான்.

அது குழந்தை பிறந்த நான்காம் மாதம். குழந்தைப்பிறப்பில் பிரச்சினையாகி சத்திர சிகிச்சையின் போது குழந்தையோடு, அவளது கருப்பையையும் முற்றாக நீக்கிவிட்டிருந்தனர். பத்துமாதம் குழந்தையைச் சுமந்த அவளுடல், பருத்துப் போய்க் கொஞ்சம் அவலட்சணமாகியிருந்தது உண்மைதான்.

அவள் வீட்டுக்கு வந்த நேரம் தொட்டு அவன் வார்த்தைகளால் வதைக்கலானான். அவள் துரதிர்ஷ்டக்காரியென்றும் அவனுக்கு நிறையக் குழந்தைகள் வேண்டுமென்றும் அவளால் இனி முடியாதாகையால் தங்கையைக் கட்டிவைக்குமாறும் கேட்டு அவளை நச்சரிக்கலானான். அவனிதை முதன்முறை சொன்னபொழுதில் அவள் மிகவும் அதிர்ந்து போனாள். பிற்பாடு அவன் எல்லாச் சண்டைகளின் போதும் இதையே சொல்லிவர அவளுக்குப் பழகிவிட்டது. தீயின் நாக்குகள் நெருப்பை எரிந்துகொண்டேயிருந்தன.

கல்யாணி இவளை விடவும் மிகுந்த அழகினைத் தன்வசம் கொண்டிருந்தாள். அதிலும் இளமையோடு, சிவப்பாக இருந்தது அவளை அவன் பக்கம் ஈர்த்திருக்கக்கூடும். ராசாத்திக்கு அவள் தங்கை என்பதனை விடக் குழந்தை என்பதே சரி. அவளது பத்துவயதில் பிறந்திட்ட தங்கை. அம்மாவைப் புற்றுநோய் தாக்கி இறந்துபோனதிலிருந்து அவளைப் பார்த்துப்பார்த்து வளர்த்தவள் இவள்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் ராசாத்திக்குக் கல்யாணமாயிற்று. ராசாத்தியின் கரிய நிறம் அவளைப் பெண் பார்க்கவருபவர்களின் கண்களை மிகவும் உறுத்தியதில் அனேக வரன்களால் நிராகரிக்கப்பட்டாள். இறுதியாக வந்த குமாரும் முதலில் மறுத்துவிட்டுப் பின்னர் சில ஒப்பந்தங்களோடு சம்மதித்தான். ரொக்கமாக ஒரு தொகைப்பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும், அவர்கள் குடியிருக்கும் வீடும் அவனுக்கு வேண்டுமென்று தரகரிடம் கேட்டு, தரகர் ராசாத்தியின் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே அவன் கல்யாணத்திற்குச் சம்மதித்தான்.

மாதாந்தம் வரும் பென்ஷன் பணத்தில் தன் இரு மகள்களுக்குமான செலவுகளைச் சமாளித்து வாழ்ந்துவந்தவருக்கு கல்யாணச் செலவுக்கு தனது ஒரே தென்னந்தோப்பை விற்பதனைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. விற்று வந்தபணத்தில் குமாருக்கான ரொக்கப்பணத்தோடு, மோட்டார் சைக்கிளையும் வாங்கிக் கொடுத்துக் கல்யாணச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுச் செய்தார். திருமணம் முடிந்து சில மாதங்களில்தான் குமாரின் சுயரூபம் தெரியவரலாயிற்று.

தினந்தோறும் மதுவாசனையோடு வீட்டுக்கு வரலானான். ஒரு நள்ளிரவில் குடித்துவிட்டு, சைக்கிளோடு வீதியில் விழுந்துகிடந்தவனை இவர்தான் தேடிப்போய்க் கூட்டி வரவேண்டியிருந்தது. அவன் வீட்டிலிருந்த சமயமெல்லாம் கல்யாணியையே தேனீர் தரச் சொல்வதும், உணவு பரிமாறச் சொல்வதும் அவனது ஆடைகளைத் துவைக்கச் சொல்வதுமாக இருந்ததில் முதன்முதலாக அச்சத்தின் சாயல் அவர் மனதில் படியலாயிற்று.

'வீட்டை அவனுக்குக் கொடுத்தாயிற்று.. இன்னும் நாமிங்கே இருப்பது சரியில்லை' என்று ராசாத்தியிடம் காரணம் சொல்லி விட்டு இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டுக்குத் தங்கள் உடமைகளோடு வாடகைக்குக் குடிபோனார்கள் அப்பாவும், தங்கையும். வீட்டில் குமார் இல்லாத சமயங்களில் இருவரும் வந்து ராசாத்தியைப் பார்த்துவிட்டுப் போனார்கள். குழந்தைப் பிறப்பின் போதும், வைத்தியசாலையிலும் கூடவே உதவிக்கு இருந்தார்கள்.

அன்றைய தினம் தொட்டில் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட பொழுதில் ஆரம்பித்த சண்டையின் போது அவன் ராசாத்தியை அடித்து, கல்யாணியுடனான திருமண எண்ணத்தைச் சத்தம்போட்டுச் சொன்னது அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த அப்பாவினதும், கல்யாணியினதும் காதுகளிலும் விழுந்தது. அந்தச் சமயம் அவன் வீட்டிலிருப்பானென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு அவன் சொன்ன சொற்களின் தீக்கங்குகள் அவர்கள் மனதில் பற்றி எரியலாயிற்று. தொடர்ந்தும் அறையிலிருந்து ராசாத்திக்கு அடிக்கும் சப்தம் வந்ததில் அப்பாவின் கோபம் எல்லை கடந்தது.தன்னுயிர் வதைப்படுவதைக் காணச் சகிக்காத கோபம்.

அவர்களது அறைக்குள் போய் மகளுக்கு அடிவிழுவதிலிருந்தும் தடுக்க அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டதில் அவன் அலமாரியின் மூலைக்கு வீசப்பட்டுப் போய்விழுந்தான். விழுந்தவன் கைகளுக்கு சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கட்டில் பலகை கிடைத்தது. அதனைத் தூக்கிக்கொண்டு அவரை அடிக்க வந்தான். அவர் அதைத் தடுக்க, அவன் மல்லுக்கட்ட... தொடர்ந்த கைகலப்பை முடிவுக்குக் கொண்டுவர, கல்யாணி அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் சமையலறைக்குள் அவருடன் உட்புறம் பூட்டிக் கொண்டாள்.

குமார் அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. தனக்குத்தேவையான எல்லாவற்றையும் சூட்கேசுக்குள் போட்டு அடுக்கியவன், தடுத்துத் தடுத்துப் பார்த்துத் திராணியற்று, வீறிட்டழும் குழந்தையைத் தோளில் போட்டவாறே நின்றிருந்தவளை ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான். போனவன் போனவன் தான். திரும்பவும் வரவேயில்லை.ராசாத்தி அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுற்பட்ட போதெல்லாம் அவளது அழைப்புக்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே வந்தன.

வீட்டில் வாழாவெட்டியாக மூத்தபெண் இருந்தால் இளையவள் வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்ற கவலை அப்பாவைப் பிடித்து வாட்டத் துவங்கியது. எப்படியாவது குமாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டு அவனைத் திரும்பக் கூட்டிவர எண்ணினார் அவர். நாலைந்து முறை அவன் ஊருக்குப் போனபோதெல்லாம் அவனைச் சந்திக்க முடியாமல் போகவே ஊர்த் தலைவரிடம் முறையிட்டு விட்டுப் போனார். அவர் இன்றுதான் வரச்சொல்லியிருந்தார்.

குழந்தை தூங்குவதைப் போல் தெரியவில்லை. கள்ளம்கபடமற்ற விழிகளைத் திறந்து இவளைப் பார்த்துப் புன்னகைத்தது. சிரிக்கக் கூடிய மனநிலையிலா இருக்கிறாள் அவள் ? மிகுந்த துயரத்தை மனம் சுமக்க, சிறு விளையாட்டுப் பொருளொன்றை அதன் கையில் கொடுத்துக் கட்டிலில் விட்டாள். குமாரது பொருட்களையெல்லாம் சேகரித்து அவனது சாறனொன்றிலேயே மூட்டை கட்டத் துவங்கினாள்.

கண் திறந்து பார்த்த அப்பாவிடம் " உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் ஊத்தட்டுமாப்பா? " எனக் கல்யாணி கேட்டாள். தலையை ஆட்டி மறுத்தவருக்குக் குமார் ஊர்த்தலைவர் வீட்டில் வைத்து எல்லோர் முன்னாலும் சொன்னது காதுகளில் மீண்டும் எதிரொலித்தது.

" அன்னிக்கு வீட்ட விட்டு அடிச்சுத் தொரத்திட்டு இன்னிக்கு மன்னிப்புக் கேட்க வந்திருக்கீக. எனக்கு நிறையக் குழந்தைங்க வேனும்..ஒத்தக் குழந்தைக்காக நான் கல்யாணம் பண்ணிக்கல. எனக்குக் கல்யாணியைக் கட்டி வைக்குறதுன்னாச் சொல்லுங்க..இப்பவே வாறேன். கட்டி வைங்க. ஒரு வீட்டிலேயே ரெண்டு பேரையும் வச்சுக் காப்பாத்துறேன். இல்லேன்னாச் சொல்லுங்க..இப்பவே அத்துவிட்டுடறேன். தாயும் வேணாம்..புள்ளயும் வேணாம் "

இதனைக் கேட்ட உடனேயே அவன் முகத்தில் 'தூ' எனக் காறியுமிழ வேண்டுமென எழுந்த எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். எதுவும் பேசாமலேயே வந்துவிட்டவர்தான் அவனது எல்லாப்பொருட்களையும் மூட்டை கட்டச் சொன்னார். ஒரு கிளியைப் பூனையிடம் கொடுத்து அதன் சிறகுகளை இழந்தது போதும்..இன்னொன்றின் சிறகுகளையும் இழப்பதற்கு அவர் மனம் ஒப்பவில்லை.

மூட்டையைத் தூக்கிவந்து அப்பாவின் அருகினில் வைத்தாள் ராசாத்தி. சத்தம் கேட்டு அவர் கண்திறந்து பார்த்தார். அவளது கரத்திலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார். அவர் காலடியில் அமர்ந்துகொண்டாள் ராசாத்தி.

" அவன் நமக்கு வேணாம்மா.ரொம்பத் தப்பாப் பேசுறான். அவனைக் கெட்ட கனவா நெனச்சு மறந்துடலாம். இனிமே அவனை ஞாபகப்படுத்துற எதுவுமே இந்த வீட்டுல என் கண்ணுல படக்கூடாது. எல்லாத்தையும் எங்கேயாவது கொண்டுபோய்த் தொலைச்சிடணும் "

அப்பா சொல்வதைக் கேட்டவாறே,

" இவனும் அவர அப்படியே உரிச்சு வச்சுப் பொறந்திருக்கானே...இவனை எங்கே கொண்டுபோய் நான் தொலைக்க ? " என்று கதறியழ ஆரம்பித்தாள் ராசாத்தி.


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

நேசத்தை விழிநீரில் அழித்து...!


வீடு முழுவதிற்குமான
மகிழ்ச்சியின் ஆரவாரத்தினை
ஒரு புகைப்படம் கொண்டுவந்தது ;
இதைப் போலப்
பேருவகையொன்றைத் தவிர்த்து
நிராகரிப்பின் பெருவலியை
அவள் அவனுக்குத் தரவிரும்பவில்லை !

அவளது வீடு வளர்கிறதா என்ன ?
அவனது காதலை ஏற்க மறுத்து
உள்ளுக்குள் புதைந்து
மனம் குறுகி நின்றவேளை
குறுகுறுப்பாகப் பார்த்து
குறுகிச் சிறுத்த அதே வீடு - இன்று
சொந்தங்களின் கிண்டல்களுக்குத்
துள்ளிக்குதித்து ஓடும் போதெல்லாம்
இத்தனை காலமும்
ஒளித்து வைத்திருந்த
நீண்ட புதுப்புதுப் பாதைகளை
அகன்று விரிக்கிறது !

சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்,
வீட்டிற்கான பழம்பெரும் கலாச்சாரங்கள்
அவளது கரம்பிடித்து
இறுக்க நெருக்குகையில்,
வெட்கத்தைப் போர்த்திய சாலைவழியே
அவனது காதலைப் பாடிச்செல்வாளென
அவனெப்படி எண்ணலாம் ?

சமுத்திரங்கள் பிரித்த
பெருங்கண்டங்களிரண்டில்
நீந்தத் தெரியாமல் அவன்களும்
நீர் வற்றுமென அவள்களும்
பார்த்தவாறு காத்திருக்கையில் ,
காதலும் , நேசங்களும்
அவன்களுக்குள்ளேயே
புதையுண்டு போகட்டும் - அவ்வாறே
அவள்களது நிலவெரிந்த
நடுநிசிகள் கண்ணீரால் நனையட்டும் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

ரிஷானின் திடீர் மறைவும் அது ஏற்படுத்திய தாக்கங்களும்...!

அவ்வளவாக இல்லை. ஐந்தே ஐந்து நாட்கள்தான்.

அலுவலகத்தில் களப்பணி ( Field visit) வேலையாக கத்தார் நாட்டின் பாலைவனநகரொன்றுக்குச் சென்றிருந்தேன்.

அங்கு இணையமில்லை. கைபேசி (Mobile) இல்லை.ஏதோ மந்திரித்துவிட்ட நாட்டுக் கோழியாகச் சுற்றிவந்து பார்க்கையில்தான் மின்னஞ்சல் பெட்டி (Mail inbox ) நிரம்பிவழிவது தெரிகிறது. ஊர் சுற்றி வந்த களைப்பைப் பார்க்கமுடியுமா என்ன ?



வலைப்பதிவுலக நண்பர்கள்
சந்திரமௌலி, பாஸ்கர், தணிகை, கார்த்திக், பிரேம்குமார், மீறான் அன்வர், ரசிகவ் ஞானியார், ரஸீம், கலீலுர் ரஹ்மான்,குட்டிசெல்வன்,காமேஷ், அஜித்குமார்,ஆயில்யன்,நாராயணன் சுப்ரமணியம் சகோதரிகள் ஷைலஜா,ஸ்வாதி,காந்தி,சாந்தி, சூர்யா,கவிநயா, சத்யா,நட்சத்திரா, சஹாராதென்றல், வாணி, பஹீமா ஜஹான் என அத்தனை பேரும் தனி மின்னஞ்சல்கள் மூலமாகவும், குழும மின்னஞ்சல்கள் மூலமாகவும், பின்னூட்டங்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புக்கள் மூலமாகவும் எனது அழைப்பின் கதவுகளைத் தட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்திருக்கிறீர்கள்.



கைபேசியின் கைதவறிய அழைப்புக்களிலெல்லாம் நண்பர்களின் எண்களோடு புதுப்புது நாடுகளின் புதுப்புது எண்கள். அத்தனையோடும் எனது குரலினை இணைக்கமறந்தமைக்கு மன்னியுங்கள் நண்பர்களே. 'பட்டப்பகலில் வெட்டவெளியில் கைவிளக்கெதற்கு ? ' என்பதனைப் போல தொடர்பு எல்லைகள் நீங்கிய பாலைநிலமதில் கைபேசியெதெற்கு என அலுவலக நண்பரிடம் கொடுத்துப் போயிருந்தேன். அவர் எனக்கு வந்த அலுவலக எண்கள் தவிர்த்து எனக்குத் தனிப்பட்ட முறையில் வந்த தொலைபேசி அழைப்புகள் எதற்கும் பதிலெதுவும் அளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டிருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருக்கு அறபுமொழியைத் தவிர்த்து வேறு பாஷைகள் தெரியாது.



குழுமத்தில் சகோதரி ஷைலஜா எழுதிய கவிதை ஆனந்தத்தில் விழிகலங்கச் செய்கிறது.



கவலையாய் இருக்கிறது

கற்பனைகள் நிஜத்தின் நிழல்தானோ

நிழல்நிஜமாகிவிடவேண்டாம் என்று

நெஞ்சம் தவிக்கிறது

கவிதை ஒன்று எழுதிவிட்டு

காணாமல் போயிருக்கும்

அன்புத்தம்பி ரிஷான்

அன்று ஒருநாள் சொன்னாரே

நினைவிருக்கிறதா

இலங்கைச் செய்திகளை

இடைவிடாது அளிக்கும்

தனக்கும் பாதுகாப்பு இல்லை என்று?

தொலைபேசியில் தொடர்பு கொண்டும்

மின்மடல்கள்பல அனுப்பியும்

பதில் ஒன்றும் இல்லை

தெரிந்தவர்கள் தகவல்சொன்னால்

செரிக்கும் என் உணவு.



நாலைந்து நாட்பிரிவுக்கே எவ்வளவு அன்பாக விசாரிக்கிறீர்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும்...? இந்த உலகில் இக்கணத்தின் அதிர்ஷ்டக்காரன் நான்தான் என எண்ணவைக்கிறது. ஏதோ ஒரு ஊரிலிருந்து வந்து எழுத என ஆரம்பித்து இன்னும் ஒருவருடம் கூடப் பூர்த்தியாகவில்லை. யாரும் இதுவரை என்னை நேரில் சந்தித்ததும் இல்லை. அதற்குள் உண்மையான நண்பர்களின் ஆதிக்கத்துக்குள் நான். மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். நன்றி இறைவனே...! நன்றி நண்பர்களே..!

இந்த அன்பும், நேசமும் என்றும் தொடர வேண்டுகிறேன்...!



என்றும் அன்புடன் உங்கள்,

எம்.ரிஷான் ஷெரீப்

உன்னைப் புலம்பும் எனது பாடல் !


அதுவொரு பெருமழைக்காலம் !
வனாந்தரங்களின் பசுமையை,
பனிக்கால நீரோடைகளின் குளிர்ச்சியை,
பூஞ்சோலைகளின் பேரழகை,
ஆலப்பெரு மரங்களின் நிழல்களை
அவள் கொண்டிருந்ததாக
நீ எண்ணி எண்ணித் திளைத்த காலம் !

ஒரு துர்தேவதையின் பாடல்கள் மட்டுமுன்
செவிகளை நிரப்பிய காலம் ,
அவளுக்கான சாபங்களனைத்தும்
உன்னைப் பீடித்தலையத்
தருணம் பார்த்துக் காத்திருந்த காலம் ;
அத்தனையையும் அறியாது - நீ
அவளுக்கு நேசனானாய் !

அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !

அவளது ஆன்மாவின் சலனங்கள்
நாணத்தைத் தொலைத்தன,
பாதங்களை முக்காடுகள்
போர்த்திக் கொண்டன ;
அன்றுதான் நண்பனே - நீ
பைத்தியமானாய் !
பறவையொன்று சத்தமிட்டுச் சிரித்ததென
அவள் சொல்லிப் போனாலும்
நம்பிப் புருவமுயர்த்தி ரசித்து மகிழ்ந்தாய் !

முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !

அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

என் ஜன்னலின் சினேகிதி !


ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது.அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது.இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல.வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட கூட்டத்தோட வந்து இந்த ஜன்னலடியில நிண்டு கத்திக்கொண்டிருப்பாள்.

அங்க பாருங்கோ.றோட்டிலை பிள்ளையளெல்லாம் ஸ்கூல் போறது தெரியுதில்லே?இப்படித்தான் நானும் முன்ன ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தனான்.வடிவா வெள்ளச்சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு போவன்.அம்மாதான் எண்ணையெல்லாம் வச்சு,ரெண்டு பின்னல்லயும்,கறுப்பு ரிப்பன் வச்சுக் கட்டியனுப்பிவிடுவா.சைக்கிள்ல போகேக்க ரிப்பன் பறக்கும் தெரியுமே? அவ்வளவு கெதியா நான் ஸ்கூலுக்குப் போவன் அப்பயெல்லாம்.

*****

"வாங்கோ சிவாண்ணை,எப்படியிருக்கிறியள்? வெளிநாட்டிலிருந்து வந்துட்டியளெண்டு கேள்விப்பட்டனான் தான்.நாங்களே வரவேண்டுமெண்டு இருந்தம்.வயசுப்பிள்ளை ரோஷினியை எங்கே விட்டுட்டு வாரதெண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தனான்.
உவள் ராஜமக்கா வரேல்லியே? "

"வந்தவள்.உவள் கோவிலடியில நிறைய ஊர்ப் பொண்டுகளோட கதச்சுக்கொண்டு நிக்குறாள்.கன நாளைக்குப் பிறகெல்லே ஊருக்கு வாரது.அதுவும் உந்தப் பொண்டுகள் சேர்ந்து கதைக்கத் தொடங்கிட்டுதெண்டால் நேரம் போறதே தெரியும்?அதுதான் நான் தங்கச்சி வீட்டுல நிக்குறன்.நீர் கதைச்சுப் போட்டு ஆறுதலா அங்க வந்து சேருமெண்டு சொல்லிப் போட்டு இங்க வந்தனான் "

*****

ஏன் இண்டைக்கு மட்டுமிவள் இவ்வளவு தாமதமெண்டு தெரியேல்ல.நீங்கள் பார்த்தனீங்களே அவளை?
தினமும் அம்மா தார இரவுச் சாப்பாட்டின்ர மிச்சம் மீதிகள இந்த ஜன்னலைத் திறந்து சட்டென்று வெளியே கொட்டிட்டு மூடிவிடுவன்.ராவில ஜன்னலைத் திறந்து வச்சுக் கொண்டு நிண்டமெண்டா பேய்,பிசாசு,ஆவியெல்லாம் வீட்டுக்குள்ள வந்திடுமெண்டு தெய்வானப்பாட்டி சொல்லியிருக்கிறவ.போன கிழமை குண்டடிபட்டுச் செத்த சரோ அக்காவின்ற ஆவியும் வருமாம்.

அவளும் நானும் நல்ல சினேகம்.எங்கட வீட்டுக்கு அயலிலதான் அவளிண்ட வீடுமிருக்குது.அவ வீட்டுல வெள்ளைக் கொய்யா இருக்குது பாருங்கோ.அது பறிச்சதெண்டால் எனக்கும் நாலஞ்சு காய் சொப்பிங் பேக்ல போட்டுக் கொண்டு வந்து தருவா.

*****

" இஞ்சருங்கோ.சிவாண்ணை வந்திருக்கிறார்.நீங்க உட்காருங்கோ அண்ணை.அவர் முத்தத்துல கோடறிக்குப் பிடி போட்டுக்கொண்டு நிக்கிறாரெண்டு நினைக்கிறேன்.பிள்ளைகள் வரேல்லியே?"

" இருக்கட்டும்.அவர் வேலை முடிஞ்சு மெதுவா வரட்டும்.நானும்,ராஜமும் விடிய முன்னமே வெளிக்கிட்டு வந்துட்டம்.கோயில்ல சனம் கூட முன்னம் சேவிச்சுட்டு வந்துடனுமெண்டுதான் கெதியா வந்தம்.பிள்ளையள் தூங்கிக் கொண்டிருந்தவை.இரவே சொல்லியிருந்தம்.அதாலை தேட மாட்டினம்."

"உந்த பெரிய அப்புச்சிப் பாட்டி,கிணத்தடியில வழுக்கி விழுந்து இடுப்பொடச்சிக் கொண்டவையில்லே.அப்ப இந்த ரோஷினியை சரோக்கிட்ட விட்டுட்டு ஓடிப்போய்ப் பார்த்துட்டு வந்தனான்.உங்கட பிள்ளையள் அங்கே நிண்டிச்சினம்.மாமி,மாமியெண்டு வடிவாக் கதச்சினம்.ஒரு நாளைக்கு இங்க கூட்டிக் கொண்டு வாங்கோவன் அண்ணை.சொந்த பந்தங்களையெல்லாம் அவையளும் தெரிஞ்சிக் கொள்ளவேண்டுமெல்லே."

"ஓமோம்.இப்ப பரீட்சை சமயமெல்லே.அதனாலதான் விட்டுட்டு வந்தனாங்கள்.அவையளுக்கும் இங்க வரவேணுமெண்டுதான் கொள்ளை ஆசை.அதுகளை நாங்கள் கூட்டிக் கொண்டு போனாத்தானே உண்டு.எங்கேயும் தனியா அனுப்பப் பயமாக் கிடக்கு."

*****

உங்களுக்குத் தெரியுமே...?உவள் சரோ கடைசியா வந்த நேரம்,நான் அம்மாக்கிட்ட மருதோண்டி வச்சு விடச் சொல்லி அடம் புடிச்சுக் கொண்டிருந்தனான்.உவள்தான் அரச்சு,சிரட்டையில கொண்டு வந்து,எண்ட உள்ளங்கைகள நீட்டச் சொல்லி வடிவா வட்டம் வட்டமா வச்சுவிட்டவள்.பாருங்கோ எவ்வளவு வடிவாச் சிவந்திருக்குதெண்டு.
என்னோடது வடிவான வெள்ளக் கையல்லோ.டக்கெண்டு சிவந்திடுமெண்டு அம்மம்மா சொன்னவ.நான் ஸ்கூலுக்குப் போற காலத்தில இப்படி மருதோண்டி வச்சுக் கொண்டு போனேனெண்டால் எண்ட வகுப்புல எல்லோரும் கைய நீட்டச் சொல்லி அழகு பார்ப்பினம்.அதுல உவள் ஜோதி..அதுதான் செல் விழுந்து குடும்பத்தோட செத்துப் போனாளே.உவள் என் கையை முகந்தும் பார்ப்பாள்.அவளுக்கும் என்னை மாதிரி மருதோண்டி வாசமெண்டால் கொள்ளைப் பிரியம்.

இப்பயும் எனக்கு சரோ அக்கா ஞாபகம் வரேக்கை இந்தக் கை ரெண்டையும் பார்த்துக் கொண்டிருப்பன்.வடிவா,சிவப்புச் சிவப்பா குட்டிக் குட்டி நிலாக்கள் மாதிரி இருக்கா? இது மாதிரித்தான் இப்ப சரோ அக்காவும் வானத்தில இருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பா எண்டு அம்மா சொன்னவ.

*****

"வாங்கோ மச்சான்.எப்படியிருக்கிறியள்? முத்தத்துல கொஞ்சம் வேலையா இருந்தனான்.வந்து கனநேரமே? "

"இல்லையில்லை.இப்பத்தான் வந்தனான்.என்ன மச்சானிது? கனக்க மெலிஞ்சு போய் நிக்குறியள்?"

"அதையேன் கேக்குறியள்? வாரத்துக்கு மூணு முறை கடைக்குச் சாமான் வாங்க டவுனுக்குப் போகவேண்டிக் கிடக்கு.மாசத்துக்கு ரெண்டு முறை உவள் ரோஷினியை கூட்டிக் கொண்டு மருந்தெடுக்க டொக்டரிட்ட போகவேண்டியிருக்கு.கடும் அலைச்சல் கண்டியளே.
ஏண்டாப்பா இங்கேயே நிக்குறீர்? போய்த் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாரும்."

"ஓமோம்.குசினிக்குப் போகத்தான் இருந்தனான்.உவள் ராஜமும் வரட்டுமெண்டு இருந்தன்.இங்க பக்கத்துக் கோவிலடியில நிக்குறாளாம்.சரி.அவள் ஆறுதலா வரட்டும்.கதைச்சுக் கொண்டிருங்கோ.நான் தேத்தண்ணியோட வாறன்"

*****

என்னடாப்பா இது? காக்கை கரையுது முத்தத்துல.உந்தக் காக்கைச் சத்தம் கேட்டதெண்டால் என்றை சினேகிதி வரமாட்டாள்.முதல்ல உந்தச் சனியனை விரட்ட வேண்டும்.
"ச்சூ...ச்சூ..."
போற மாதிரித் தெரியேல்ல.என்ன பார்த்துக்கொண்டிருக்கிறியள்? கொஞ்சம் விரட்டிவிடுங்கோவன்.உதைக் கண்டால் அவள் வரமாட்டாள்.இந்த வீணாப்போனவையளக் கண்டா அவளுக்குச் சரியான பயம்.அதுலயும் கருப்பெண்டா எனக்கும் பயம்தான்.ராவைக்குக் கூட அம்மா பக்கத்துல படுத்தாலும் இருட்டில படுக்கமாட்டேன்.
இருங்கோ,இந்தப் பேனையால அவையளுக்கு வீசியடிக்கப் போறேன்.

*****

"பிள்ளைகள் வரேல்லியே?"

"இல்லை மச்சான்.உவள் ராஜமிண்ட தங்கச்சி செண்பகம் ஊரிலையிருந்து இடம்பெயர்ந்து வந்து இப்ப எங்கட வீட்டுலதான் தங்கியிருக்கிறவ.அவக்கிட்ட பிள்ளையளப் பார்த்துக்கொள்ளச் சொல்லிப் போட்டு வந்தனாங்கள்."

"ஓமோம்.அது நல்லது.உவள் 19 வயசுப் பெட்டை சரோ,இந்த மூன்றாம் வீட்டு அறிவுத்தம்பியோட மகள் உப்படித்தான்.போன கிழமை அவரிண்ட கிழக்கு வளவுக்குள்ளயிருந்து தென்னஞ்சூள பொறுக்கிக்கொண்டு வாரனெண்டு போனவள்.ரொம்ப நேரமாகியும் காணேல்லயெண்டு எல்லா இடத்திலயும் தேடித் தேடிக் கடைசில ராத்திரி குண்டடி பட்டுப் பிணமாக்கிடந்தவள சுடுகாட்டிலிருந்து தூக்கிவந்தம்.வல்லுறவுக்குமாளாக்கியிருந்திச்சினம்.வீட்டிலிருந்தாளெண்டால் உவள் இங்கேதான் ரோஷினியோட விளையாடிக் கொண்டிருப்பாள்.நாங்கள் எங்கேயாவது போறதெண்டால் கூட ரோஷினியை உவள் கிட்டத்தான் விட்டுட்டுப் போவம்.பாவம் நல்ல பிள்ளை."

"இந்தாங்கோ அண்ணை.தேத்தண்ணி ஊத்தேல்ல.வேப்பமரத்துல உந்த சாத்தாவாரி கனக்கக் கிடந்துச்சு.அதுதான் இடிச்சுக் கஞ்சி வச்சனான்.இந்தப் பனங்கருப்பட்டியோட குடிங்கோ அண்ணை.உடம்புக்கு நல்லது.வெளிநாட்டுல குடிச்சேயிருக்க மாட்டியள்."

"ஓம் தங்கச்சி.இதையெல்லாம் கனநாளைக்குப் பிறகு குடிக்கிறனான்.முன்னம் அம்மா சுவையாச் செஞ்சுதருவா இதுபோல.வெளிநாட்டுல சோறே ஒழுங்காக் கிடைக்காது."

*****

அட,பேனை வீசியடிக்கக் காக்கை பறந்திட்டுது.இங்க வாங்கோ.பாருங்கோ.அந்தக் கரண்ட் கம்பியில நிண்டு வெறிச்சுப் பார்த்துக்கொண்டு இருக்குதில்லே.உந்தக் கருப்பன்தான்.அடாடா பாருங்கோ.அதே கரண்ட் கம்பியில ஒரு வௌவால் தலைகீழாய்ச் செத்துக்கிடக்கு.உந்தக் காக்கைக்கு ஷொக் அடிக்காதே? மனுசருக்கெண்டால் ஷொக் அடிக்கும் தெரியுமே? நான் பார்த்திருக்கிறனான்.

உங்களோட கதைச்சுக் கொண்டு நிண்டதுல உவளை நான் மறந்துட்டன்.இன்னும் காணேல்லை.எனக்கு கவலையாக் கிடக்கு.பாருங்கோ,நீங்க இண்டைக்கு வந்த நேரமாப்பார்த்து இவள் வரேல்ல.தினசரி வாரவ.சிலநாள் நான் எழும்பமுன்னமே வந்து ஜன்னலடியில நிப்பாள்.பருப்புக் கடலை இருக்கேல்ல.அவளுக்கு அதுல கொள்ளை ஆசை.அவள் வந்தால் நான் அதத்தான் குடுப்பன்.
இண்டைக்கு உங்களுக்குக் காட்டோனுமெண்டு நினச்சன்.பாருங்கோ,இன்னும் வரேல்ல.

*****

"உவள் ரோஷினி எங்கே காணேல்ல? முன்னாடி நான் வந்தனெண்டால் மாமா,மாமாவெண்டு சொல்லிப் பின்னாலேயே திரிவாள்.இப்ப பதினேழு வயசு முடிஞ்சிருக்குமென்ன? என்ர பிள்ளை வாசனை விட ஒரு வயசுதானே குறைச்சல்? "

"ஓமண்ணை.பதினேழு வயசு முடிஞ்சிட்டுது.கேள்விப்பட்டிருப்பியள்.ஸ்கூலுக்குப் போயிட்டுவரேக்க 'ஐடிண்டி கார்ட் இல்ல,விசாரிக்கவேணும்'எண்டு ஆர்மியால தடுத்துநிறுத்தி முகாமுல கொண்டு போய் விசாரிச்சிருக்கினம்.கரண்ட் ஷொக் எல்லாம் கொடுத்திருக்கினம்.அதுல பிள்ளை நல்லாப் பயந்து போய் புத்தி பேதலிச்சுப் போயிட்டுது.பிள்ளை உயிரோட கிடைச்சதே போதுமெண்டு கூட்டிவந்துட்டம்.டொக்டரிட்ட காட்டிக் கொண்டிருக்கிறம்."

*****

கேட்குதே? உங்களுக்குக் கேட்குதே? அவள் வந்திட்டாள்.கேளுங்கோ.உந்த சத்தத்தைக் கேளுங்கோ.பூ நெல்லி மரத்தடியிலிருந்து கொண்டு சத்தம் போடுறவை.இப்பப் பாருங்கோ.இஞ்சையும் வரும்.அந்தப் பருப்புக்கடலையை பக்கத்துல வச்சிருப்பமென்ன?அவளுக்குக் கொடுக்க வேணும்?

நான் எழும்பிக் கனநேரமாயிட்டுது.இன்னும் மூஞ்சைக் கூடக் கழுவேல்ல.உதுகளப் பாருங்கோ.வெள்ளனையே எழும்பி எவ்வளவு வடிவா என்னைத் தேடி வந்திருக்கெண்டு.அவள் வந்தால் நான் அவள் கூடக் கதைப்பன்.நீங்களும் கதையுங்கோ.சரியே?

*****

"குழப்படியேதும் பண்றவவே?"

"இல்லையண்ணே.அவளும் அவளிண்ட பாடுமெண்டு ரூமுக்குள்ளேதான் கிடப்பாள்.தனக்குத்தானே சத்தமா கதைச்சிக்கொண்டு இருப்பாள்.உங்களுக்கும் சத்தம் கேட்குதில்லே? உவள்தான் கதைக்கிறவள்.ராமு வீட்டு நாயைக் கண்டா மட்டும் கத்திக் கூச்சல் போட்டுடுவாள்.நீங்கள் வந்திருக்கிறது தெரியாதெண்டு நினைக்கிறேன்.இருங்கோ கூப்பிடுறேன்.
ரோஷினி,பிள்ளை இங்க வாங்கோ.யாரு வந்திருக்கினமெண்டு வந்து பாருங்கோ."

*****

உவள் பெயரென்ன எண்டு கேட்க மாட்டியளே? முன்னம் நான் உவளை பாமா எண்டு கூப்பிட்டேன்.அவள் எனக்கு ஸ்கூல்ல நல்ல சினேகிதி.ஒருநாள் காணாமல் போயிட்டா.கடத்திட்டுப் போயிட்டினமாம்.அப்ப அவள் நினைவா பாமா எண்டு கூப்பிட்டேன்.இப்ப சரோ எண்டு கூப்பிடறனான்.

பாருங்கோ அந்த சாம்பல் குருவிதான்.நீங்களும் சரோவெண்டே கூப்பிடுங்கோ.இருங்கோ.அம்மா கூப்பிடுறா.யாரோ வந்திருக்கினமாம்.நான் ஓடிப்போய்ப் பார்த்துட்டு வாரன்.நீங்க சரோகிட்ட பேசிக்கொண்டிருங்கோ.அதுல இருக்கிற பருப்புக் கடலைய ஒவ்வொண்ணாப் போடுங்கோ.நான் கெதியா வாரேன்.சரியே?




-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

சொற்களின் விளக்கங்கள் :-

# கனக்க - அதிகமாக
# வெள்ளனை - காலைநேரம்
# பொண்டு - பெண்கள்
# கன நாள் - நீண்ட நாட்கள்
# ராவு - இரவு
# முத்தம் - முற்றம் / வீட்டின் வெளிப்புறம்
# கொள்ளை ஆசை - மிக விருப்பம்
# வடிவு - அழகு
# தேத்தண்ணி - தேனீர்
# குசினி - சமையலறை
# காக்கை - காகம்
# சாத்தாவாரி - ஒரு வகைக்கீரை

த.அகிலனின் 'தனிமையின் நிழல் குடை'


எப்போதும்
எனது
சொற்களிற்கான
இன்னோர் அர்த்தம்
எதிராளியின்
மனதில்
ஒளிந்திருக்கிறது


முன்னட்டை ஓவியமே அழகிய கவிதையாக அமைந்த த.அகிலனின் 'தனிமையின் நிழல்குடை' கவிதைத் தொகுப்பை சகோதரி கவிஞர். பஹீமா ஜஹான் எனக்கனுப்பியிருந்தார்.கடல் தாண்டித் தேசம் தாண்டி வரச்சற்றுத் தாமதமானாலும் கூட வந்து சேர்ந்த அன்றே வாசித்துப் பார்த்தேன்.அதன்பிறகு பலமுறை.ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இவரது கவிதைகளொவ்வொன்றும் வித விதமான வெவ்வேறு அர்த்தங்களைப் பாடுவதாகவே படுகிறது.

பின்புலத்தில் ஒரு மரம்.காற்றில் இலைகள் அசைவதாகக் கூட இல்லை.புல்லாங்குழல் ஊதியபடி எவ்வித அலங்காரங்கலுமற்ற ஒரு சிறுவன்.இதுதான் வசீகரமான அந்த முன்னட்டை ஓவியம்.அந்தப் புல்லாங்குழலின் துளைகளினூடு வெளித்தெரியாத தனிமையின் இசை வழிந்தோடிக் கொண்டிருப்பதாக இருக்கக் கூடும்.

மேலுள்ள இவரது கவிதை முன்னட்டையின் பின்புறத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது.சிறியதாகவோ,பெரியதாகவோ ஒருவரைப் பற்றிய தீர்ப்பினை மனதில் எழுதிவிட்ட பிறகே அவருடனான நமது உரையாடல் சாத்தியப்படுகிறது.அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதிலாவது அவரது முழுக்கருத்தை மட்டுமே அசைபோட்டுக்கொண்டிருக்குமா நமது எண்ணங்கள்?

உரையாடலின் மறுபுறத்திலுள்ளவர் நமக்குப் பிடித்தவரெனில் அவர் பேசுவதத்தனையிலும் இனிமை பொங்கிவழிவதாகவே காண்போம்.அவர் நமது மனதுக்கு ஒவ்வாதவராக இருப்பின் ?அவரது பேச்சில் நல்லவைகளிருப்பினும் ஏதோ கெடுதியொன்றைச் சொல்வதாகவே அர்த்தப்படுத்திக் கொள்வோம்.

மனதிற்குள் மீண்டும் மீண்டும் வந்து போகும் மாயப்பாதங்களை இவரது மேலுள்ள கவிதை வரிகள் கொண்டிருக்கின்றன.அடிக்கடி அசைபோட வைப்பதையும்,யாருடனாவது உரையாட நேரும் தருணங்களில் எண்ணத்தில் வந்துபோகும் அற்புதத்தையும் இவ்வரிகள் தம்மில் சுமந்தவண்ணம் இருக்கின்றன.இனித் தொகுப்பினுள் நுழைவோம்.வாருங்கள்.

மழை எப்பொழுதுமே தன்னுடன் மாயங்களையும்,விசித்திரங்களையும்,அற்புதங்களையும் துளிகளுடனும் ஈரத்துடனும் எடுத்துவருபவை.முதல் மழைத்துளி நம்மை நனைத்த கணமோ,அதனைப் பார்த்த கணமோ நம்மில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?
மழை பொழியும் அந்தப்பொழுதில் அவரவர் எண்ணங்களைப் பொறுத்து மழை அழகாயும் இருக்கலாம,ஆபத்தாகவும் இருக்கலாம் ஏன் இடையூறாகக் கூட இருக்கலாம்.ஆனால் மழை பற்றிய ஈரக்குறிப்புகள் மட்டும் நம் மனதை விட்டு என்றும் நீங்காதவை.

இத் தொகுப்பின் முதல் கவிதையாக உள்ள 'மழை என்னும் பிராணி' கவிதையின் இறுதி வரிகளிவை.

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப் போயிருக்கிறது
தூக்கம்

மிகத் தெளிவான வரிகள்.அத்தனை சொல்லிலும் ஈரம் சொட்டச் சொட்ட.மழைக்கால இரவுகளில் விழித்திருந்த நினைவுகள் மீளவும் மீட்டப்படுகின்றன.அத்துளிகள் காய்ந்திருக்கும் இப்பொழுது.மேகங்கள் ஈர்த்து வேறு இடங்களில் வேறொருவர் உறக்கத்தைப் பறிக்கப் பெய்துமிருக்கும்.ஆனாலும் நம் தூக்கம் பறித்த அந்த மழை இரவுகள் எப்பொழுதும் மனதில் ஈரம் சொட்டிக்கொண்டே தானே இருக்கும்.

இவரது 'மீள் நினைவு' கவிதை ஞாபகங்களின் அடுக்கைத் தோண்டவிழைகிறது.நமது அத்தனை ஞாபகங்களிலும் ஏதோவொரு சடப்பொருளோ,உயிர் ஜீவனோ அடக்கமாக உறங்கிக்கொண்டிருக்கும்.நினைவு விரலின் சிறுதொடுகை போதும் அதனை ஊர்ந்திடச் செய்யவும் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பரிக்கச் செய்யவும்.அதனை மிக அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

கொஞ்சம்
நளினமாய் மோதும்
மெல்லிய காற்று,
ஏன்?
ஒரு
தேனீர்க்குவளையின்
ஓரம்கூடப் போதுமானதாயிருக்கும்
ஞாபகங்களைக்
கிளறி விடுவதற்கு


பதிலிட முடியாக் கேள்விகளும்,தவறான விடைகளே பதில்களாக அமைந்த கேள்விகளும் அழுத்தும் கொடூர பாரமதனை 'சிந்திப்பது குறித்து' கவிதையில் இறக்கிவைத்து விடுகிறார் அகிலன்.

நான்
சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன்
எதைப்பற்றியும்..
அது என்னைக்
கேள்விகளால் குடைந்து
கொண்டேயிருக்கிறது.
அது
எப்போதும் மகிழ்ச்சியின்
எதிரியாயும்
துயரத்தின்
தொடர்ச்சியாயுமே நீள்கிறது.


அழகுத்தோல் போர்த்திய குரூரங்கள்,கொடிய விஷங்களைக் கொண்டு நிரப்பிய மனங்கள் இவரில் ஏற்படுத்திய தாக்கங்களினைப் பின்வரும் வரிகள் சொல்கின்றன.

எல்லோருடைய
புன்னகைகளின் பின்னால் உள்ள
வேட்டைப்பற்கள் குறித்தும்
ஒளிரும் ஒவ்வொரு வார்த்தையினதும்
குரூர நிறத்தையும்
சிந்தனைதான்
எனக்குச் சொல்லித்தருகிறது


எதைப்பற்றியும் சிந்திப்பதை நிறுத்திவிடுவது குறித்தான தீர்மானத்தையெப்படி அடைந்தாரென்பதை இப்படியெழுதிக் கவியினை முடிக்கிறார்.

புன்னகைகளை
வெறுமனே புன்னகைகளாயும்
வார்த்தைகளை
வெறுமனே வார்த்தைகளாயும்
மனிதர்களின்
கண்களின் பின்னால் உள்ள
இருள் நிறைந்த காடுகளை
பசும் வயல்களெனவும்
நான்
நம்பவேண்டுமெனில்
நிச்சயமாக
நான்
சிந்திப்பதை நிறுத்தியேயாக வேண்டும்


தேவதை குறித்த சொற்கள் எந்தக் கவிஞருக்கும் இடறாமல் இல்லை.சிறு வயதில் தேவதைக் கதைகளையும் சாத்தான்களின் கதைகளையும் கேட்டவாறே வளர்கிறோம்.பின்னாட்களில் சாத்தான்கள் எப்பொழுதுமே வாழ்வினைச் சூழ்ந்திருக்க, தேவதைகளை மட்டும் எப்பொழுதாவதுதான் சந்திக்கநேர்கிறது.அப்படித் தன்னால் பார்க்க நேர்ந்த ஒரு தேவதைப் பெண்ணைப் பற்றித் தனது 'உரசிப் போகும் பட்டாம்பூச்சி' கவிதையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

நான்
அவளைக் காண்கிறேன்
தேவதைகள் நிரம்பிய தெருவில்
அவளை மட்டுமாய்
தனியே
அவள்
கண்களில் இருந்து பறந்து போகும்
பட்டாம் பூச்சியைக் குறிவைத்து
நடந்தபடியோ
கொக்கான் வெட்டியபடியோ
அல்லது
முந்தையநாள் இரவில்
தன்னோடு உறங்கமறுத்த
பூனைக்குட்டியைப்பற்றிய
ஏக்கம் நிரம்பிய
சொற்களோடோ தான்
அவள் எப்போதுமிருக்கிறாள்...


தேவதையின் பார்வை வீச்சினைப் பட்டாம்பூச்சிக்கு ஒப்பிடும் கவிஞர் அந்தப் பட்டாம்பூச்சிச் சிறகடிப்பில் உருவான தென்றல் தன்னில் மோதிச் சென்ற அனுபவத்தை

எப்போதாவது
நான்
தேவதைகளின் தெருவில்
நடக்க நேர்கையில்
என்னை உரசிச்செல்கிறது
அவள்
கண்களின் பட்டாம்பூச்சி


எனச் சொல்கிறார்.இதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் 'சொற்களைத் திருடிய வண்ணாத்தி' கவிதையில் வெளிப்படுகிறது.

உன் மௌனம்
ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய
குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது.

உன்
கண்களிடமிருந்து
வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்ட
அந்த முத்தத்தின் முடிவில்..
நமக்கான சொற்களையும்
திருடிக்கொண்டு
தம் சிறகுகளால்
காலத்தைக் கடந்தன வண்ணத்திகள்


இரு மனக்காதலின் பின்னரான மௌனங்களும்,முத்தங்களும் எப்பொழுதும் சலனத்துக்குரியவையாகவே இருக்கின்றன என்பதனைச் சொல்வதனை

என்ன சொல்வது
உன்
மௌனங்களைப் பற்றி
எழுத நேர்கையில்
முத்தங்களைப் பற்றியும்
எழுதவேண்டியிருப்பதை


இக் கவிதையின் முடிவினில் பார்க்கக் கிடைக்கிறது.

வாட்டி வதைத்த கோடைக் காலமொன்று தான் பீடித்திருந்த எல்லாவற்றையும் விட்டு நீங்கிச் சென்றதைச் சொல்லும் 'கோடை/02' கவிதையின் இறுதிப் பகுதி மிகவும் அழகானது.

மழைக்குத் தாளமிடும்
சிறுமியின் புன்னகை
கூரை
கடந்து விழும்
முதல் துளியில்
கரைந்தவிழ

அவள்
காலடியில் உடைந்து
அழத்தொடங்குகிறது
கோடை..


பெருங் கோடைக்குப் பின்னரான முதல்மழையில் எல்லா மனங்களும் குதூகலிக்கும்.வரண்ட செடி முதற்கொண்டு வியர்த்த மனிதர்கள் வரை அனைவரினது விழிகளும் ஆகாயத்தையே மழைக்காக நோக்கியவண்ணமிருக்கையில் பெய்யும் முதல்மழை எவ்வளவு உவகையை அள்ளிவருகிறது...?!

புன்னகையைப் போர்த்திய துயரத்தின் குரூரம் மிகும் பரவுதலை இவரது 'துயரின் பயணம்' கவிதை சொல்கிறது.கவிதையின் பாடுபொருளை மிக அழகான எளிய வரிகளில் சுருக்கமாகச் சொல்வதில் தான் இவரது சூட்சுமம் இருக்கிறது.

எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்

ஒரு
புன்னகையில் இருந்து
மற்றுமோர்
புன்னகைக்கு...

வழிநெடுக
புன்னகைகளை
வாரியணைத்தபடியும்
ஒவ்வொரு
புன்னகையின்
முகத்திலும்
தன்னை
அறைந்தபடியும்
பயணிக்கிறது
துயரம்...


துயர் சூழ்ந்த ஒருவரிடமிருந்து அடுத்தவரிடம் அது பற்றிக்கொள்வதனை

அது தன்
தீராக் காதலோடு
தொடர்ந்தும் இயங்கும்
இன்னொரு
புன்னகையை நோக்கி


இப்படியெழுதி முடிக்கிறார்.

இவரது முத்தங்களைப் பூக்களுக்கும் காதலி நிராகரித்த முத்தங்களை வாடிய பூக்களுக்கும் ஒப்பிட்டு காலம் காலமாய் வாடிய பூக்களை மட்டுமே சேமித்த மனதினைத் திறந்து காட்டுகிறார் காதலிக்கு இவ்வாறாக.

பூக்களால் ஆகிறது
ஒரு கவிதை.

என் எதிரில்
பூக்களைத் தவறவிடா
உன் உதடுகள்.

ஆனாலும்
நான்
நிறையப் பூக்கள்
கொண்டுவருகிறேன்
புறந்தள்ளிப் போகிறாய்...

அவை
ஒவ்வொன்றாய்
வாடி வீழ
உன்
ஒவ்வொரு மறுதலிப்பின்
முடிவிலும்
நான்
பூக்களைச் சேமிக்கிறேன்.


இவரது இந்தக் கவிதை 'உன் புன்னகை குறித்து' தலைப்பின் கீழிருக்கிறது.

இக்கவிதையினைத் தொடர்ந்து அடுத்துவரும் கவிதையான ‘சூரியனின் சித்திரம்' கவிதையில் பூவைப் பெண்ணுக்கும் சூரியனை ஆணுக்கும் ஒப்பிட்டு எழுதியிருப்பதாக எனக்குப் படுகிறது.

ஒவ்வொரு பூவிடமும்
இருக்கிறது சூரியன்
குறித்த சித்திரம்


தனக்கு வரப்போகும் கணவனான ஆணைப் பற்றிய எண்ணக்கரு எப்பொழுதுமே ஒரு கன்னிப்பெண்ணின் இதயத்தில் குடியிருந்துகொண்டே இருக்கும்.

பூக்களைத் தமக்குள்
பதுக்கிக்கிடக்கும்
மொட்டுக்களின்
முதுகுகளில்
எழுதப்படுகிறது
சூரியனின் தோல்வி

பூக்களின் முகங்களில்
ஒட்டிக்கிடக்கிறது
சூரியனின் புன்னகை


எப்பொழுதும் பெண் வதனத்தின் மலர்ச்சியில்தான் அவளை நாடும் ஆணின் உவகை இருக்கிறது.

ஆனாலும்
இரவில்
நிலவுக்குப் பயந்து
அவற்றை
உதிர்த்துக்கொண்டு
தம்மை உரிக்கின்றன
மரங்கள்.


ஆனால் பெண்ணானவள் சடங்குகள்,சம்பிரதாயங்கள் என்ற எல்லைகளுக்குள்ளே மட்டுமே வளையவர விதிக்கப்பட்டவள்.இங்கு நிலவு அதற்கு ஒப்பிடப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன்.நிலவானது வளரும்,தேயும்.ஆனால் பெண் ? அவளது எல்லைகள் ? எல்லைகளை விதித்த மரங்களே அதற்கான தண்டனையாக தம்மை உதிர்த்துக் கொள்கின்றனவோ?

எல்லோருடைய எதிர்பார்ப்புக்களுமான ஏக்கங்கள் சில 'எதிர்பார்ப்பு'கவிதையில் வருகின்றன.

என்
மரணத்தின்போது
நீ ஒரு உருக்கமான
இரங்கல் கவிதையளிக்கலாம்
ஏன்?
ஒரு துளி
கண்ணீர் கூட
உதிர்க்கலாம்


என்
கல்லறையின் வாசகம்
உன்னுடையதாயிருக்கலாம்
அதை நீ
பூக்களால்
நிறைக்கலாம்


எப்பொழுதுமே சலனத்துக்குரிய எதிர்பார்ப்புக்கள் இவை.ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கள் ஈடேறுமா என நாம் அறிவோமா?
ஆனால் இக்கவிதையின் அடுத்த வரிகள் எவ்வித எதிர்பார்ப்புக்களும் அற்றன.

நீ
என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேனீரோ
வரும்
பௌர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்
எண்ணங்கள் கிடையாது


எந்த எண்ணமும் அற்ற மனதில் ஒரு விடையறியாக் கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது.அது

இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையாயிருக்கிறதா?


ஒரு அதிர்வை ஏற்படுத்தும் கேள்வியல்லவா இது?எவ்வளவு அழகாக கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்.

தாய்நாட்டினைப் பிரிந்த துயரத்தையும் அதனாலான இழப்புகளையும் வலிகளோடும்,தைக்கும் நிதர்சனத்தோடும் சொல்கிறது 'கடலின் வரிகள்' கவிதை.

எனது தெருவின் புழுதி
சிறு அடைப்பெனக் கிடக்கலாம்
நுரையீரல் கோளங்களிற்குள்


சிறு வயதில் தெருவலைந்து உடலும் சுவாசமும் சுமந்த புழுதி கழுவிடக் கழுவிடக் கரைந்து போய்விடுமா என்ன?காலம் கழுவி விட்டால்தான் உண்டு.காலம் அதனைச் செய்தாலும் தெருவின் புழுதிவாசம் மட்டும் நாசிக்குள்ளேயே இருக்கும்.

முற்றத்தின்
ஞாபகங்களைத் தேக்கிவைத்திருக்கும்
என் காலடி மறுபடியும்
திரும்புவதற்கில்லை.

அண்ணியிடம் சோற்றைப்
பிசைந்து தருமாறு சண்டையிடமுடியாது
குட்டிப்பையனின் எச்சில் முத்தங்கள்
மழலை அழைப்புக்கள்
கிடையவே கிடையாது

இனி எப்போதும்
உயிருள்ள ஒரு கவிதை
என்னால்
எழுதவே முடியாது


தாய்நாட்டைப் பிரிந்ததான ஏக்கமும்,பழைய தடங்களும் அதனுடனான வலியும் கவிதையில் எளியவரிகளில் வெளிப்படுவது மிகச்சிறப்பு.அதுவே வாசிக்கும்போது மனதில் எளிதில் பதிந்துவிடக் கூடியதாக இருக்கிறது.

நமைச் சூழ நடக்கும் அத்தனைக்கும் ஒரு மௌன சாட்சியாகவே நமது ஜீவிதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.கண்ணெதிரில் நடக்கும் அநீதிகளை,தூக்கம் பறிக்கும் செயல்களை ஜீரணிக்கமுடியாக் கோபம் 'சாட்சியாயிருத்தல்'கவிதையில் வெளிப்படுகிறது.

புன்னகைக்கும்
வேதனைக்கும்
அழிவுக்கும்
மீட்சிக்கும்
அவமானத்திற்கும்

இப்படி
எல்லாவற்றுக்கும்
சாட்சியாய்
மௌனத்தை விழுங்கிக் கொண்டு
எத்தனை நாளைக்கு
இருந்துவிட முடியும்.


அகதியாகிப்போன அக்காவுக்கான கடிதமென அகிலன் வரைந்திருக்கும் கவிதைதான் 'இது கவிதையில்லை'.இக் கடிதம் ஒரு அக்காவுக்கு மட்டுமான கடிதமா என்ன?

எனக்குத் தெரியும்
உன்
எல்லாப் பிரார்த்தனைகளையும் மீறி
எம்
எல்லோருடைய
புன்னகைகளையும்
அவர்கள்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்
என்பது.


தாய்தேசத்திலேயே அகதியாகி வேதனைகளைச் சும்ந்துகொண்டிருக்கும் அத்தனை உயிருக்குமான கடிதம் அது.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிறைப்படுத்தப்பட்டதான வாழ்க்கையின் வேதனை வரிகளை இவரது 'அம்மம்மாவின் சுருக்குப் பை' கவிதையும் சொல்கிறது.

சிட்டுக்குருவியின்
இறகுகளில்
பின்னப்பட்டிருந்தது வாழ்க்கை..

ஒரு
வேட்டைக்காரனின்
குறிக்குள் வீழ்ந்தபின்
வரையறுக்கப்பட்ட
வானத்திடம்
அதிசயங்கள் ஏதுமில்லை.

தடங்கள்
இறுகிக் கொண்டன
.

மென்மையாகவும் பத்திரமாகவும் இருந்த வாழ்க்கையானது யுத்தத்தின் பிடியில் சிக்கிட நேர்ந்ததன பிற்பாடு அதன் எல்லைகள் சுருங்கிவிட்டதென வலியோடு சொல்கிறது இக்கவிதை.

இவருடைய 'சாத்தானுடன் போகும் இரவு' கவிதையும் கொடூரம் போர்த்திய யுத்த ஊரின் இரவைப் பற்றிப் பேசுகிறது.

ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்த சாவிற்கு
காத்திருக்கலாயிற்று.

பாதித்தூக்கத்தில்
அடித்து எழுப்பப்பட்ட
வெறியில்
அலைந்தன சாத்தான்கள்
இரவுக்குக் கைகள் முளைத்தன.

மனிதர்களைத்
தறித்து விழுத்தியபடி
தனது நிறத்தை
ஊரெங்கும் பூசிச்செல்கிறது
இரவு


பல உயிர்களைக் காவு வாங்கும் இரவின் இருளொன்றில் எத்தனை சாத்தான்கள் ஒளிந்திருக்கின்றன?அத்தனை சாத்தான்களாலும் அகோரங்களே நிகழ்ந்திட

சூரியனைப் போர்த்தபடி
கேள்விகளற்று
நடந்துபோகிறது
இரவு சாத்தானுடன்.


என முடிக்கிறார்.சாத்தான்களுடனான இரவுகள் மட்டும் நீண்டுகொண்டேயிருக்கின்றன.

இதே போன்ற இவரது இன்னொரு கவிதையான 'அடுத்து வரும் கணம்' இப்படிச் சொல்கிறது.

துப்பாக்கிகளிற்குக்
கால்கள் முளைத்த இரவில்
அவை வெறிகொண்டெழுந்தன

ஒரு கலையாடியின் கோபம்போல
இரவு முழுதும் பெய்த மழையில்
கரைந்து போயிருந்தது
பலியாடுகளின் இரத்தம்


வழிநெடுகத் துரத்தும் வலிகளையும் அச்சத்தையும் குறித்துக் கவிதையை முடிக்கிறார்.

அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்
நிரம்பக்கிடக்கின்றன
வழிமுழுதும்.


போர்ப்பிரதேசமொன்றில் நாட்கள் நகருகையில் அங்கு வாழ்ந்திட நேரும் குழந்தைகளுக்கான இராக்கதைகளில் துப்பாக்கிகள் இருக்கும்.ஆனால் தேவதைக்கதைகளை எத்தனை பேரால் சொல்லவியலும்? தாம் வாழ்ந்த அழகிய தேசமதனை அழிந்திடச் செய்ததை தைரியமாகப் பேசமுடியுமா என்ன? 'துப்பாக்கிகளும் சில தேவதைக் கதைகளும்/02' பாருங்கள்.

நான்
தேவதைக் கதைகளை
எழுதிக்கொண்டேயிருப்பேன்

ஏனெனில்
சபிக்கப்பட்ட என் நிலத்தில்
தேவதைகள் குறித்த
சொற்கள் மட்டுமே
துப்பாக்கிகளால்
அச்சமூட்டப்படாதிருக்கின்றன.

இப்போதெல்லாம்
இன்னுமின்னும்
அச்சமூட்டப்பட்டிருக்கின்றன
சொற்கள்.
புன்னகைகளைப்
பலியிட்டுவிட்டபின்
சொற்களையும் பலியிடுவோம்.


அகிலனின் 'வெட்கக் குறிப்புகள்' கவிதை காதல்,யுத்தங்களிலிருந்து விடுபட்டு வேறொரு நிதர்சன உலகைக் கண் முன்னே கொண்டுவருகிறது.அதிலிருக்கும் 3 சின்னக் கவிதைகளும் சொல்லும் அனுபவங்கள் அனைவருக்கும் வாய்த்திருக்கக் கூடுமானவை.

இரவிற்கு வெளிச்சம் பிடித்து வரும் நிலவினைச் சாடுகிறார் தன் 'மதங்கொண்ட நிலவு' கவிதையில்.இரவின் கறுப்பில் நிகழும் அத்தனை அநீதிகளுக்கும் சாட்சியாகப் பார்த்திருக்கும் நிலவு,இவரின் கவிதையின் இறுதியில் இப்படி வருகிறது.

யாரும்
விசாரணைகளை நிகழ்த்தும் வரை
எல்லாவற்றினதும்
மௌனச் சாட்சியாய்
அலைந்து கொண்டேயிருக்கும்
அது.


ஒரு அடர் வனாந்திரத்தையும் சமுத்திரத்தையும் கடந்து வந்த நிகழ்வினை 'காட்டின் நினைவு' கவிதையாக்கியிருக்கிறார்.இக்கவிதையில் காட்டைப் பற்றியும் கடலைப்பற்றியுமான இவரது பார்வை வியக்கவைக்கிறது.

காடு
அடர்ந்திருந்தது
அதன் ரகசியங்களைப் போல
எங்களையும் விழுங்கிக்கொண்டு
மௌனமாய்.
ஆனால்
கடல்
அப்படியல்ல அதனிடம்
ரகசியங்கள் கிடையா
அதற்கு மௌனமும் தெரியா !


விடையறியாக் கேள்விகளை முன்னிறுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படுகையில் வதையுர நேரும் அவலத்தை 'கேள்விகளின் குகை'கவிதை சொல்கிறது.இக்கவிதையின் இறுதிவரிகள் மனம் அதிரச் செய்பவை.

சுவர்
உறுஞ்சிக் கறுத்த
இரத்தத்தின் சுவடென
இரவு கவிகையில்..
என் இதயத்தின் ஒலி
அவன் காதுவரைக்கும் வந்து
அச்சமூட்டுவதாய்
அருகில் அழுதவன்
சர்வ நிச்சயமாய்ச் சொன்னான்.


யுத்தத்தின் பெருவலியைச் சுமந்த கவிதைகளும்,காதலின் கடைக்கண் தீட்டிய பேருவகையைக் கொண்டாடும் கவிதைகளும்,சுயத்தினைப் பாடும் கவிதைகளும்,இங்கு குறிப்பிடப்படாக் கவிதைகளுடன் சேர்த்து 'தனிமையின் நிழல் குடை'யில் நிறைந்திருக்கின்றன.முழுவதுமாய் வாசித்துமுடித்ததன் பிற்பாடு எழுதியவரைக் கவிதைகளினூடு புரிந்துகொள்ள முடியுமாயிருக்கிறது.இதுவே தனது படைப்புகளினுள் வாழும் கவிஞரின் வெற்றியெனலாம்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?

அண்மையில் 'தமிழ்மணத்தில்' பார்த்து, அமலன் என்பவரது 'கடகம்' வலைத்தளத்தில் நுழைந்தேன்.



மிகவும் அதிர்ச்சியளித்தது அந்த வலைத்தளம்.எனது மூன்று பதிவுகளைத் திருடி (என்னிடம் அனுமதியைப் பெறாமல் தன் பதிவிலிட்டுள்ளதால் வேறு சொல் தெரியவில்லை) தனது வலைத்தளத்தில் இட்டிருக்கிறார்.நீக்கிவிடச் சொல்லி பின்னூட்டம், மின்னஞ்சல் மூலம் அறிவித்தும் இதுவரையில் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.



என்னுடைய பதிவுகள் மட்டுமல்ல. சகோதரி கமலாவினது சமையல் குறிப்புகளும் அங்கிருக்கின்றன.மற்ற பதிவுகளின் பதிவர்கள் யாரெனத் தெரியவில்லை.



எனது மனிதாபிமானம் உங்களுக்கு மாத்திரமா ? பதிவு அங்கு,

எனது பெட்டி,பெட்டியாகத் தர்பூசணிகள் பதிவு அங்கு,



எனது யானைகள் பதிவு அங்கு,

சுயமாக எழுதத் தெரியாவிட்டால் ஏன் பதிவெழுதவேண்டும் ? இல்லாவிட்டால் பதிவின் சொந்தக்காரரிடம் அனுமதியைப் பெற்று தன் வலைத்தளங்களில் இடலாமே ? ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில் அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?